3922. |
பையர
வம்விரி காந்தள்விம்மு |
|
பரிதிந்
நியமத்துத்
தையலொர் பாக மமர்ந்தவனைத்
தமிழ்ஞான சம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்தபத்தும்
பரவிப் புகழ்ந்தேத்த
ஐயுற வில்லை பிறப்பறுத்தல்
அவலம் அடையாவே. 11 |
11.
பொ-ரை: படத்தையுடைய பாம்பு போல மலர் விரிந்த
காந்தட்செடிகள் செழித்துள்ள திருப்பரிதிநியமம் என்னும்
திருத்தலத்தில் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு
வீற்றிருந்தருளும் பொய்யிலியாகிய சிவபெருமானைப் போற்றி,
தமிழ்வல்ல ஞானசம்பந்தன் உண்மையன்போடு அருளிய இப்பத்துப்
பாட்டுக்களாலாகிய பாமாலையால் புகழ்ந்து வணங்குபவர்களின்
பிறப்பு அறும் என்பதில் ஐயமில்லை. அவர்கட்கு இம்மையில் துன்பம் எதுவும் இல்லை.
கு-ரை:
பை அரவம் விரிகாந்தள் - படத்தையுடைய பாம்பு
போல மலர் விரிந்த காந்தட் செடிகள். விம்மு - தழைத்த. படம்
விரித்த மலரையும் தண்டு பாம்பின் உடலையும் ஒக்கும். காந்தள் -
திணைமயக்கம். பொய்யிலி - சிவனுக்கு ஒரு பெயர். (
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேனானே அப்பர்
திருத்தாண்டகம்). ஆன் - விகுதிமேல் விகுதி, பிறப்பு அறுக்கப்பட்டு
அங்கு அவலம் அடையா என்பதற்குச் சற்றும் ஐயுற வில்லை என்க.
|