3932. மாசு பிறக்கிய மேனியாரு
       மருவுந் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரு
     மறியா ரவர்தோற்றங்
காசினி நீர்த்திரண் மண்டியெங்கும்
     வளமார் கலிக்காமூர்
ஈசனை யெந்தை பிரானையேத்தி
     நினைவார் வினைபோமே.             10

     10. பொ-ரை: நீராடாததால் அழுக்கு உடலையுடைய
சமணர்களும், மஞ்சட் காவியாடையைப் போர்த்திய உடலையுடைய
புத்தர்களும் சிவபெருமானது பெருமையை அறியாதவர்கள். எனவே
அவர்களைப் பின்பற்றாத இந்நிலவுலகில் நீர்ப்பெருக்கு எங்கும்
நிறைந்து நல்லவளம் பொருந்திய திருக்கலிக்காமூர் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எம் தந்தையும் தலைவனுமான
சிவபெருமானைப் போற்றித் தியானிப்பவர்களுடைய வினைகள்
நில்லாது போம்.

     கு-ரை: மாசு - அழுக்கை. பிறக்கிய - மிகுவித்த. மேனியார் -
சமணர். மீசு (மீது) - மேல். பிறக்கிய - விளங்குவித்த, போர்த்த
மெய்யினார் - புத்தர். பிறங்கிய - பிறக்கிய என ஈரிடத்தும் பிற
வினை.மீசு, மீது என்பதன் மரூஉ. போலியெனினுமாம். காசினி - பூமி.
நீர்த்திரள் - நீர்ப்பெருக்கு.