3946. விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம்
       விரிபூ மலர்க்கொன்றை
பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த
     பெருமா னெரியாடி
நண்ணிய தன்னடி யார்களோடுந்
     திருநாரை யூரானென்
றெண்ணுமி னும்வினை போகும்வண்ண
     மிறைஞ்சுந் நிறைவாமே.               2

     2. பொ-ரை: ஆகாயத்தில் விளங்கும், மின்னல் போன்ற
ஒளியுடைய சந்திரனையும், படப்புள்ளிகளையுடைய பாம்பினையும்,
விரிந்த கொன்றைமலரையும், கங்காதேவிக்கு முன்னே சடையிலணிந்த மிகவும் மகிழ்ந்த பெருமான், நெருப்பேந்தி ஆடுபவர். திருநாரையூர்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அச்சிவ பெருமானை
மனம், வாக்கு, காயத்தால் வழிபடுகின்ற அடியார்கள் கூட்டத்தோடு
நீங்களும் சேர்ந்து தியானம் செய்யுங்கள். உங்கள் வினைகள்
தொலைந்துபோகும் வண்ணம் வணங்குங்கள். எல்லா நலன்களும்
நிறையக் குறைவிலா இன்பம் உண்டாகும்.

     கு-ரை: மதி - பிறையையும், துத்திநாகம் - படப்புள்ளிகளை
உடைய பாம்பையும். விரிபூமலர்க் கொன்றை - விரிந்த பொலிவை
உடைய கொன்றை மலரையும். பெண்ணின் முன்னே - கங்கா
தேவிக்கு முன். (சடையில்) வைத்து - அணிந்து. மிக உகந்த -
மிகவும் மகிழ்ந்த பெருமான். இறைஞ்சும் நிறைவாமே -
வணங்குங்கள் இன்பம் குறையாது வரும். இறைஞ்சும் - பன்மை
ஏவல்வினைமுற்று.