3950. கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங்
       குலாய மலர்சூடி
அக்கர வோடரை யார்த்துகந்த
     வழகன் குழகாக
நக்கம ருந்திரு மேனியாளன்றிரு
     நாரை யூர்மேவிப்
புக்கம ரும்மனத் தோர்கடம்மைப்
     புணரும் புகறானே.                   6

     6. பொ-ரை: சிவபெருமான் தலையில் கொக்கின் இறகையும்,
குளிர்ந்த பொன்னூமத்தையின் செழித்த மலரையும் சூடியவர்.
எலும்பைப் பாம்போடு சேர்த்து இடுப்பில் கட்டி மகிழும் அழகர்.
இளமையாய்த் திகம்பரராய்த் திகழும் திருமேனியுடையவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும்
திருத்தலத்தை அடைந்து, அவரை விரும்பி வழிபடும் மனத்தையுடையவர்களிடத்துத் திருவருட்சத்தி பதியும்.

     கு-ரை: சென்னி - தலையின்கண். கொக்கு இறகு - கொக்கின்
இறகும். குளிர் மத்தம் - குளர்கின்ற பொன் ஊமத்தையின். குலாய -
செழித்த. மலர் - மலரும். (உம்மையை மேலுங் கூட்டுக).
சிவபெருமான் கொக்கின் இறகு அணிவர் என்பதைத் திருக்
கோவையா (தி.8)ரில் காண்க. அரை ஆர்த்து - இடுப்பில் கட்டி.
உகந்த - விரும்பிய. குழகு ஆக - இளமையோடு. நக்கு அமரும்
திருமேனி ஆளன் - ஆடை இல்லாமையை விரும்பிய திருவுடம்பை
உடையவன். நக்கு - இது நக்கம் என்பதன் கடைக்குறை. நக்கம்
வடசொல். மேவிப்புக்கு - போய்ச்சேர்ந்து. புகல் - திருவருட்சத்தி
பதிதல். புணரும் - கூடும்.