3969. |
மாலயன்
றேடிய மயேந்திரரும் |
|
காலனை
யுயிர்கொண்ட கயிலையாரும்
வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
ஆலையா ரூராதி யானைக்காவே. 3 |
3.
பொ-ரை: திருமாலும், பிரமனும் தேடிய சிவபெருமான்
திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவரே
மார்க்கண்டேயருக்காகக் காலனை மாய்த்த கயிலைநாதர். பஞ்சபூதத்
தலங்களுள் அப்புத்(நீர்) தலமாக விளங்கும் திருஆனைக்காவில்
வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருந்தருளுபவர். கருப்பங்கழனிகளை
உடைய திருவாரூரில் வீற்றிருந்தருளுபவரும் அவரே.
கு-ரை:
வேலை (அது) ஓங்கும் வெண்ணாவல் - கடல்போல்
நீர் பொங்கப் பெற்ற வெண்ணாவல். பஞ்சபூதத் தலங்களில்
அப்புத்தலம் ஆதலாலும், செழுநீர்த் திரளைச்சென்று ஆடினேனே
(தி.6.ப.63.பா.1) என அப்பர் அடிகள் கூறியவாறு, இறைவனே
நீர்வடிவாய் இருத்தலாலும், வேலையது ஓங்கும் என்று கூறப்பட்டது.
ஆலை ஆரூர் - கருப்பங் கழனிகளையுடைய திருவாரூர். ஆலை
என்பது தானியாகு பெயர்.
|