3991. விளங்குநான்மறை வல்லவேதியர்
       மல்குசீர்வளர் மிழலையானடி
உளங்கொள்வார்தமை யுளங்கொள்வார்வினை
     யொல்லை யாசறுமே.                   2

     2. பொ-ரை: நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்ல
அந்தணர்கள் வசிக்கின்ற, புகழ்மிக்க திருவீழிமிழலையில்
வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உள்ளத்தால்
தியானிப்பவர்கள் சிவனடியார்கள், அவ்வடியார்களை வழிபடும்
அன்பர்களின் வினையான குற்றம் விரைவில் நீங்கும்.

     கு-ரை: நான் மறை வல்ல வேதியர் மல்குசீர் வளர்மிழலை
என்பது தில்லை மூவாயிரம்; திருவீழிமிழலை ஐந்நூறு; என்னும்
பழமொழிப்படி அந்தணர்கள் மிகுதியைக் குறித்ததாம். ‘ஐந்நூற்று
அந்தணர் ஏத்தும் எண்ணில் பல்கோடி குணத்தர் ஏர்வீழி, இவர்
நம்மை ஆளுடையாரே’ (தி.9 திருவிசைப்பா.54) என்று சேந்தனார்
கூறுவதுங் கொள்க. வினை ஆசு அறும் - வினை பற்று அற நீங்கும்.