4117. |
தலையொரு
பத்துந் தடக்கையை திரட்டி |
|
தானுடை
யரக்கனொண் கயிலை
அலைவது செய்த வவன்றிறல் கெடுத்த
வாதியா ருறைவிடம் வினவில்
மலையென வோங்கு மாளிகை நிலவு
மாமதின் மாற்றல ரென்றும்
உலவுபல் புகழா ரோமமாம் புலியூ
ருடையவர் வடதளி யதுவே. 8 |
8.
பொ-ரை: பத்துத் தலைகளும், நீண்ட இருபது கைகளும்
உடைய அரக்கனாக இராவணன் ஒளிபொருந்திய திருக்கயிலை
மலையினை அசைக்கத் தொடங்க, அவனது வலிமையைக் கெடுத்த
ஆதியாராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம்
எதுவென வினவில், மலைபோல் ஓங்கியுயர்ந்த மாளிகையும்,
அதனுடன் விளங்கும் பெரிய மதிலும் கூடிய, செல்வநிலை என்றும்
மாறாதவராய் விளங்குகின்ற பல்வகையான புகழ்களையுடைய
அந்தணர்கள் வசிக்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி
என்னும் திருக்கோயிலாகும்.
கு-ரை:
அலைவு (அது) செய்த:- அசைக்கத்தொடங்கிய
மலையென ஓங்கும் மாளிகை. மாளிகைக்கு மலை உவமை. தென்
திருமுல்லை வாயில் திருப்பதிகத்தில் குன்றொன் றொடொன்று
குழுமி (தி.2.ப.88.பா.4.) என உருவகித்து இருத்தலையும் அறிக.
செய்குன்று.
|