4136. காவியங் கண்மட வாளொடுங் காட்டிடைத்
  தீயக லேந்திநின் றாடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினி லைந்துகொண்டாட்டுகந் தீரே.         6

     6. பொ-ரை: தேன் நிறைந்த மலர்கள் பொருந்திய
குளிர்ச்சிமிக்க திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும்
திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, பசுவிலிருந்து
பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுதலை
விரும்பும் பெருமானே! குவளை மலர் போன்ற அழகிய
கண்களையுடைய உமாதேவியோடு சுடு காட்டில் கையில் தீ ஏந்தி
நின்று ஆடுகின்றீர்.

     கு-ரை: தீயகல் ஏந்தி நின்று ஆடுதிர் என்பது “கரதலத்தில்
தமருகமும் எரியகலும் பிடித்து ஆடி” எனச் சுந்தரமூர்த்திகள் திரு
வாக்கில் வருவதும் காண்க.