09. திருவீழிமிழலை - காந்தாரபஞ்சமம்
 
2889. கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர் கேடு இலா
வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார்,
வாழியர்; தோற்றமும் கேடும் வைப்பார், உயிர்கட்கு எலாம்;
ஆழியர்; தம் அடி “போற்றி!” என்பார்கட்கு அணியரே.     1
உரை
   
2890. கல்லின் நன்பாவை ஓர் பாகத்தார், காதலித்து ஏத்திய
மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார்;
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து, எழு ஞாயிற்றின்
பல் அனைத்தும் தகர்த்தார், அடியார் பாவநாசரே.     2
உரை
   
2891. “நஞ்சினை உண்டு இருள் கண்டர், பண்டு அந்தகனைச் செற்ற
வெஞ்சின மூஇலைச்சூலத்தர் வீழிமிழலையார்;
அஞ்சனக் கண் உமை பங்கினர், கங்கை அங்கு ஆடிய
மஞ்சனச் செஞ்சடையார்” என, வல்வினை மாயுமே.     3
உரை
   
2892. கலை, இலங்கும் மழு, கட்டங்கம், கண்டிகை, குண்டலம்,
விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார்
தலை இலங்கும் பிறை; தாழ்வடம், சூலம், தமருகம்,
அலை இலங்கும் புனல், ஏற்றவர்க்கும்(ம்)
                                                அடியார்க்குமே.     4
உரை
   
2893. பிறை உறு செஞ்சடையார், விடையார் பிச்சை நச்சியே
வெறி உறு நாள்பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார்;
முறைமுறையால் இசை பாடுவார், ஆடி, முன்; தொண்டர்கள்-
இறை; உறை வாஞ்சியம் அல்லது, எப்போதும் என்
                                                              உள்ளமே.     5
உரை
   
2894. வசை அறு மா தவம் கண்டு, வரிசிலை வேடனாய்,
விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார்;
இசை வரவிட்டு, இயல் கேட்பித்து, கல்லவடம் இட்டு,
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே.     6
உரை
   
2895. சேடர் விண்ணோர்கட்கு, தேவர், நல் மூஇருதொல்-நூலர்,
வீடர், முத்தீயர், நால்வேதத்தர் வீழிமிழலையார்;
காடு அரங்கா, உமை காண, அண்டத்து இமையோர் தொழ,
நாடகம் ஆடியை ஏத்த வல்லார் வினை நாசமே.     7
உரை
   
2896. எடுத்த வல் மாமலைக்கீழ் இராவணன் வீழ்தர,
விடுத்து அருள்செய்து, இசை கேட்டவர் வீழிமிழலையார்;
படுத்து வெங்காலனை, பால் வழிபாடு செய் பாலற்குக்
கொடுத்தனர், இன்பம், கொடுப்பர், தொழ; குறைவு
                                                     இல்லையே.     8
உரை
   
2897. திக்கு அமர் நான்முகன், மால், அண்டம் மண்தலம் தேடிட,
மிக்கு அமர் தீத்திரள் ஆயவர் வீழிமிழலையார்;
சொக்கம் அது ஆடியும், பாடியும், பாரிடம் சூழ்தரும்
நக்கர்தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே.     9
உரை
   
2898. துற்று அரை ஆர் துவர் ஆடையர், துப்புரவு ஒன்று இலா
வெற்று அரையார், அறியா நெறி வீழிமிழலையார்-
சொல்-தெரியாப் பொருள், சோதிக்கு அப்பால் நின்ற
                                                  சோதிதான்-
மற்று அறியா அடியார்கள் தம் சிந்தையுள் மன்னுமே.     10
உரை
   
2899. வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய
ஆதியை, வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து,
ஓதிய ஒண்தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர்,
மாது இயல் பங்கன் மலர் அடி சேரவும் வல்லரே.     11
உரை