10. திருஇராமேச்சுரம் - காந்தாரபஞ்சமம்
 
2900. அலை, வளர் தண்மதியோடு அயலே அடக்கி, உமை
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன்; முனி;
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்,
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து
                                                       ஆட்சியே.     1
உரை
   
2901. தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன்
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற,
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே.     2
உரை
   
2902. மான் அன நோக்கி வைதேவி தன்னை ஒரு மாயையால்
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன்,
ஈனம் இலாப் புகழ் அண்ணல், செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே.     3
உரை
   
2903. உரை உணராதவன், காமம் என்னும்(ம்) உறு வேட்கையான்,
வரை பொரு தோள் இறச் செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து
அரை அரவு ஆட நின்று, ஆடல் பேணும் அம்மான்
                                                       அல்லனே!     4
உரை
   
2904. ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி, பல ஊர்தொறும்,
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய, விறல் ஆர்ந்தது ஓர்
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம்
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி
                                                       பேருமே.     5
உரை
   
2905. அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன்,
பணை இலங்கும் முடிபத்து இறுத்த, பழி போக்கிய
இணை இலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்,
துணை இலி தூ மலர்ப்பாதம் ஏத்த, துயர் நீங்குமே.     6
உரை
   
2906. சனி, புதன், ஞாயிறு, வெள்ளி, திங்கள், பலதீயன,
முனிவது செய்து உகந்தானை வென்று, அவ் வினை மூடிட,
“இனி அருள் நல்கிடு!” என்று அண்ணல் செய்த இராமேச்சுரம்,
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே!     7
உரை
   
2907. பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான் தன் பெயர் சாய் கெட,
அரு வரையால் அடர்த்து, அன்று நல்கி, அயன் மால் எனும்
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே!     8
உரை
   
2908. சாக்கியர், வன் சமண்கையர், மெய்யில்-தடுமாற்றத்தார்
வாக்கு இயலும்(ம்) உரை பற்று விட்டு, மதி ஒண்மையால்,
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்மின்(ன்), அருள்
                                                        ஆகவே!     10
உரை
   
2909. பகலவன் மீது இயங்காமைக் காத்த பதியோன்தனை
இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம்,
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ், புந்தியால்,
அகலிடம் எங்கும் நின்று, ஏத்த வல்லார்க்கு இல்லை,
                                                       அல்லலே.     11
உரை