32. திருஏடகம் - கொல்லி
 
3140. வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்,
பொன் இயல் திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட, அடியவர்
இன் இசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே.     1
உரை
   
3141. கொடி நெடுமாளிகை, கோபுரம், குளிர்மதி
வடிவு உற அமைதர, மருவிய ஏடகத்து
அடிகளை அடி பணிந்து அரற்றுமின், அன்பினால்!
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே.     2
உரை
   
3142. குண்டலம் திகழ்தரு காது உடைக் குழகனை
வண்டு அலம்பும் மலர்க்கொன்றை, வான்மதி, அணி
செண்டு அலம்பும் விடைச் சேடன்-ஊர் ஏடகம்
கண்டு கைதொழுதலும், கவலை நோய் கழலுமே.     3
உரை
   
3143. ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும்
கோலம் ஆர்தரு விடைக் குழகனார் உறைவு இடம்
சால(ம்) மாதவிகளும், சந்தனம், சண்பகம்,
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம், செல்வமே.     4
உரை
   
3144. வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட,
கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன்;
பெரியவன்; பெண்ணினோடு ஆண் அலி ஆகிய
எரியவன்; உறைவு இடம் ஏடகக் கோயிலே.     5
உரை
   
3145. பொய்கையின் பொழில் உறு புதுமலர்த் தென்றல் ஆர்
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
ஐயனை அடி பணிந்து, அரற்றுமின்! அடர்தரும்
வெய்ய வன்பிணி கெட, வீடு எளிது ஆகுமே.     6
உரை
   
3146. தடவரை எடுத்தவன் தருக்கு இற, தோள் அடர்
பட, விரல் ஊன்றியே, பரிந்து அவற்கு அருள் செய்தான்;
மடவரல், எருக்கொடு, வன்னியும், மத்தமும்,
இடம் உடைச் சடையினன்-ஏடகத்து இறைவனே.     8
உரை
   
3147. பொன்னும், மா மணிகளும், பொருதிரைச் சந்து அகில்
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவு உற;
அன்னம் ஆம் அயனும், மால், அடி முடி தேடியும்
இன்ன ஆறு என ஒணான்-ஏடகத்து ஒருவனே.     9
உரை
   
3148. குண்டிகைக் கையினர், குணம் இலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றையும் வன்னியும்
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே.     10
உரை
   
3149. கோடு, சந்தனம், அகில், கொண்டு இழி வைகை நீர்
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை,
நாடு தென்புகலியுள் ஞானசம்பந்தன
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.     11
உரை