34. திருமுதுகுன்றம் - கொல்லி
 
3159. வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட,
அண்ணலார் ஆயிழையாளொடும் அமர்வு இடம்
விண்ணின் மா மழை பொழிந்து இழிய, வெள் அருவி சேர்
திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.      1
உரை
   
3160. வெறி உலாம் கொன்றை அம் தாரினான், மேதகு
பொறி உலாம் அரவு அசைத்து ஆடி, ஓர் புண்ணியன்,
மறி உலாம் கையினான், மங்கையோடு அமர்வு இடம்
செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.      2
உரை
   
3161. ஏறனார், விடைமிசை; இமையவர் தொழ உமை-
கூறனார்; கொல் புலித் தோலினார்; மேனிமேல்
நீறனார்; நிறைபுனல் சடையனார்; நிகழ்வு இடம்
தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.      3
உரை
   
3162. உரையின் ஆர் உறு பொருள் ஆயினான், உமையொடும்;
விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார்; மேவு இடம்
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய்த்
திரையின் ஆர் எறி புனல்-திரு முதுகுன்றமே.      4
உரை
   
3163. கடிய ஆயின குரல் களிற்றினைப் பிளிற, ஓர்
இடிய வெங்குரலினோடு ஆளி சென்றிடு நெறி,
வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்வு இடம்
செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.     5
உரை
   
3164. கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார், பெரியது ஓர்
வானம் ஆர் மதியினோடு அரவர், தாம் மருவு இடம்,
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து, உமையொடும்
தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.     6
உரை
   
3165. மஞ்சர் தாம், மலர்கொடு வானவர் வணங்கிட,
வெஞ்சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே,
அம் சொலாள் உமையொடும்(ம்) அமர்வு இடம் அணி கலைச்
செஞ் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே.      7
உரை
   
3166. காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை
ஏரின் ஆர் முடி இராவணன், எடுத்தான், இற,
வாரின் ஆர்முலையொடும் மன்னனார் மருவு இடம்
சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே.     8
உரை
   
3167. ஆடினார், கானகத்து; அருமறையின் பொரு
பாடினார்; பலபுகழ்ப் பரமனார்; இணை அடி
ஏடின் ஆர் மலர்மிசை அயனும், மால், இருவரும்
தேடினார் அறிவு ஒணார்; திரு முதுகுன்றமே.     9
உரை
   
3168. மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர்
பேசு மெய் உள அல; பேணுவீர்! காணுமின்-
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம்(ம்) இசை செய,
தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே!     10
உரை
   
3169. திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை
நண்ணினான், காழியுள் ஞானசம்பந்தன், சொல்
எண்ணினார், ஈர் ஐந்து மாலையும் இயலுமாப்
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.     11
உரை