48. திருமழபாடி - கௌசிகம்
 
3309. அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக்
கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவிய
மங்கையான், உறையும் மழபாடியைத்
தம் கையால்-தொழுவார் தகவாளரே.      1
உரை
   
3310. விதியும் ஆம்; விளைவு ஆம்; ஒளி ஆர்ந்தது ஓர்
கதியும் ஆம்; கசிவு ஆம்; வசி ஆற்றம் ஆம்;
மதியும் ஆம்; வலி ஆம் மழபாடி
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே.     2
உரை
   
3311. முழவினான், முதுகாடு உறை பேய்க்கணக்-
குழுவினான், குலவும் கையில் ஏந்திய
மழுவினான், உறையும் மழபாடியைத்
தொழுமின், நும் துயர் ஆனவை தீரவே!      3
உரை
   
3312. கலையினான், மறையான், கதி ஆகிய
மலையினான், மருவார் புரம் மூன்று எய்த
சிலையினான், சேர் திரு மழபாடியைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே.      4
உரை
   
3313. நல்வினைப் பயன், நால்மறையின் பொரு
கல்வி ஆய கருத்தன், உருத்திரன்,
செல்வன், மேய திரு மழபாடியைப்
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே.      5
உரை
   
3314. நீடினார் உலகுக்கு உயிர் ஆய் நின்றான்;
ஆடினான், எரிகான் இடை மாநடம்;
பாடினார் இசை மா மழபாடியை
நாடினார்க்கு இல்லை, நல்குரவு ஆனவே.      6
உரை
   
3315. மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகம் ஆய்
மன்னினான் உறை மா மழபாடியைப்
பன்னினார், இசையால் வழிபாடு செய்து
உன்னினார், வினை ஆயின ஓயுமே.      7
உரை
   
3316. தென் இலங்கையர் மன்னன் செழு வரை-
தன்னில் அங்க அடர்த்து அருள் செய்தவன்
மன் இலங்கிய மா மழபாடியை
உன்னில், அங்க உறுபிணி இல்லையே.      8
உரை
   
3317. திருவின் நாயகனும், செழுந்தாமரை
மருவினானும், தொழ, தழல் மாண்பு அமர்
உருவினான் உறையும் மழபாடியைப்
பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே     9
உரை
   
3318. நலியும், நன்று அறியா, சமண்சாக்கியர்
வலிய சொல்லினும், மா மழபாடியு
ஒலிசெய் வார்கழலான் திறம் உள்கவே,
மெலியும், நம் உடல் மேல் வினை ஆனவே.     10
உரை
   
3319. மந்தம் உந்து பொழில் மழபாடி
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான்,
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்-
பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை, பாவமே.     11
உரை