54. பொது - திருப்பாசுரம் - கௌசிகம்
 
3372. வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!      1
உரை
   
3373. அரிய காட்சியராய், தமது அங்கை சேர்
எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்
கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்,
பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே?      2
உரை
   
3374. வெந்த சாம்பல் விரை எனப் பூசியே,
தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்;
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ!     3
உரை
   
3375. ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்
கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா;
கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார்     4
உரை
   
3376. ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி;
மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்!
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே     5
உரை
   
3377. ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில்,
நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே?      6
உரை
   
3378. கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்ல
படி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டு
முடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்தி
அடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும்
                                                        அன்றே!      7
உரை
   
3379. வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம்
ஏதப்படாமை, உலகத்தவர் ஏத்தல் செய்ய,
பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே!      8
உரை
   
3380. பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி
பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி,
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப்
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே!      9
உரை
   
3381. மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும்
பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த
ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது
                                                           ஆமே!      10
உரை
   
3382. அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும்,
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப்
பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில்,
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே!   11
உரை
   
3383. நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்,
பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்,
வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே!   12
உரை