59. திருக்குடமூக்கு - பஞ்சமம்
 
3427. அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே,
மர விரி போது, மௌவல், மணமல்லிகை, கள் அவிழும்
குர, விரி சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இர விரி திங்கள் சூடி இருந்தான்; அவன் எம் இறையே.      1
உரை
   
3428. ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து, அயலே
பூத்து, அரவங்களோடும், புகை கொண்டு அடி போற்றி, நல்ல
கூத்து அரவங்கள் ஓவா, குழகன், குடமூக்கு இடமா,
ஏத்து அரவங்கள் செய்ய, இருந்தான்; அவன் எம் இறையே. 2
உரை
   
3429. மயில் பெடை புல்கி ஆல, மணல் மேல் மட அன்னம் மல்கும்,
பயில் பெடை வண்டு பண் செய் பழங்காவிரிப் பைம்பொழில்
                                                                    வாய்,
குயில் பெடையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா,
இயலொடு வானம் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே.  3
உரை
   
3430. மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து, உமையாள் வெருவ,
அக்கு, அரவு, ஆமை, ஏனமருப்போடு, அவை பூண்டு, அழகு
                                                                     ஆர்
கொக்கரையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா,
எக்கரையாரும் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே.    4
உரை
   
3431. வடிவு உடை வாள்-தடங்கண் உமை அஞ்ச, ஒர் வாரணத்தைப்
பொடி அணி மேனி மூட உரிகொண்டவன்; புன்சடையான்;
கொடி நெடுமாடம் ஓங்கும், குழகன், குடமூக்கு இடமா,
இடி படு வானம் ஏத்த இருந்தான்; அவன் எம் இறையே.   5
உரை
   
3432. கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே,
தழை வளர் மாவின், நல்ல பலவின், கனிகள் தயங்கும்
குழை வளர் சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இழை வளர் மங்கையோடும் இருந்தான்; அவன் எம்
                                                      இறையே.      6
உரை
   
3433. மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான்; எழில் வையம் உய்யச்
சிலை மலி வெங்கணையால் சிதைத்தான், புரம் மூன்றினையும்;
குலை மலி தண்பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா,
இலை மலி சூலம் ஏந்தி இருந்தான்; அவன் எம் இறையே.  7
உரை
   
3434. நெடு முடிபத்து உடைய நிகழ் வாள் அரக்கன்(ன்) உடலைப்
படும் இடர் கண்டு அயர, பருமால் வரைக்கீழ் அடர்த்தான்;
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா,
இடு மணல் எக்கர் சூழ இருந்தான்; அவன் எம் இறையே.  8
உரை
   
3435. ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய
நீர் இரி புன்சடை மேல் நிரம்பா மதி சூடி, நல்ல
கூர் எரி ஆகி நீண்ட குழகன்; குடமூக்கு இடமா,
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான்; அவன் எம் இறையே. 9
உரை
   
3436. மூடிய சீவரத்தார், முது மட்டையர், மோட்டு அமணர்
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன் நலத்தான்,
கூடிய குன்றம் எல்லாம் உடையான், குடமூக்கு இடமா,
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான்-அவன் எம்
                                                   இறையே.      10
உரை
   
3437. வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான்-
நண்பொடு நின்ற சீரான், தமிழ் ஞானசம்பந்தன்-நல்ல
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார்
விண் புடை மேல் உலகம் வியப்பு எய்துவர்; வீடு எளிதே. 11
உரை