4.4 திருஆரூர்
காந்தாரம்
32பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும்,
கூடு இளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்,
ஓடு இள வெண் பிறையானும், ஒளி திகழ் சூலத்தினானும்,
ஆடு இளம் பாம்பு அசைத்தானும்-ஆரூர் அம்ர்ந்த அம்மானே.
உரை
   
33நரியைக் குதிரை செய்வானும், நரகரைத் தேவு செய்வானும்,
விரதம் கொண்டு ஆட வல்லானும், விச்சு இன்றி நாறு செய்வானும்,
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட, முன் பணிந்து அன்பர்கள் ஏத்த,
அரவு அரைச் சாத்தி நின்றானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை
   
34நீறு மெய் பூச வல்லானும், நினைப்பவர் நெஞ்சத்து உளானும்,
ஏறு உகந்து ஏற வல்லானும், எரி புரை மேனியினானும்,
நாறு கரந்தையினானும், நால்மறைக் கண்டத்தினானும்,
ஆறு சடைக் கரந்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை
   
35கொம்பு நல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்தானும்,
செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழக் கண் சிவந்தானும்,
வம்பு நல் கொன்றையினானும், வாள் கண்ணி வாட்டம் அது எய்த
அம்பர ஈர் உரியானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை
   
36ஊழி அளக்க வல்லானும், உகப்பவர் உச்சி உள்ளானும்,
தாழ் இளஞ் செஞ்சடையானும், தண்ணம் ஆர் திண் கொடியானும்,
தோழியர் தூது இடையாட, தொழுது அடியார்கள் வணங்க,
ஆழி வளைக் கையினானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை
   
37ஊர் திரை வேலை உள்ளானும், உலகு இறந்த ஒண் பொருளானும்,
சீர் தரு பாடல் உள்ளானும், செங்கண் விடைக் கொடியானும்,
வார் தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தவனும்,
ஆர்திரை நாள் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை
   
38தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்குத் தோன்றி அருள வல்லானும்;
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கன்ற்ற நின்றானும்;
குழல் கங்கையாளை உள் வைத்துக் கோலச் சடை கரந்தானும்;
அழல், கம், கை ஏந்த வல்லானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை
   
39ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்,
ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோள் உடையானும்,
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்,
ஆயிரம் பேர் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை
   
40வீடு அரங்கா நிறுப்பானும், விசும்பினை வேதி தொடர
ஓடு அரங்கு ஆக வைத்தானும், ஓங்கி ஒர் ஊழி உள்ளானும்,
காடு அரங்கா மகிழ்ந்தானும், காரிகையார்கள் மனத்து
ஆடு அரங்கத்து இடையானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை
   
41பை அம் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தானும்,
கை அஞ்சு -நான்கு உடையானைக் கால்விரலால் அடர்த்தானும்
பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க்கு அருள்செய்யும்
ஐ-அஞ்சின் அப் புறத்தானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.
உரை