4.21 திருஆரூர்
திரு ஆதிரைத் திருப்பதிகம்
குறிஞ்சி
208முத்து விதானம்; மணி பொன் கவரி; முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
உரை
   
209நணியார் சேயார், நல்லார் தீயார், நாள்தோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்;-
“மணியே! பொன்னே! மைந்தா! மணாளா!” என்பார்கட்கு
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
உரை
   
210வீதிகள் தோறும் வெண் கொடியோடு விதானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர் மா மணிகள்; ஒளி தோன்றச்
சாதிகள் ஆய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
உரை
   
211குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
உரை
   
212நில வெண் சங்கும் பறையும்(ம்) ஆர்ப்ப, நிற்கில்லாப்
பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்து, எங்கும்
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
உரை
   
213விம்மா, வெருவா, விழியா, தெழியா, வெருட்டுவார்;
தம் மாண்பு இலராய்த் தரியார், தலையான் முட்டுவார்
“எம்மான், ஈசன், எந்தை, என் அப்பன்” என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
உரை
   
214செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பாா
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்
இந்திரன் ஆதி வானவர், சித்தர், எடுத்து ஏத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
உரை
   
215முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல,
வடி கொள் வேய்த்தோள் வான் அரமங்கையர் பின் செல்ல,
பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ,
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
உரை
   
216“துன்பம், நும்மைத் தொழாத நாள்கள்” என்பாரும்,
“இன்பம், நும்மை ஏத்தும் நாள்கள்” என்பாரும்,
“நுன்பின் எம்மை நுழையப் பணியே!” என்பாரும்;
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
உரை
   
217பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்து ஏத்த,
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து,
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்!
உரை