4.29 திருச்செம்பொன்பள்ளி
திருநேரிசை
284ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி,
வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்;
நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள்
தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே
உரை
   
285நொய்யவர்; விழுமியாரும்; நூலின் நுண்நெறியைக் காட்டும்
மெய்யவர்; பொய்யும் இல்லார்; உடல் எனும் இடிஞ்சில் தன்னில்
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகிச்
செய்யவர்; கரிய கண்டர்-திருச் செம்பொன்பள்ளியாரே.
உரை
   
286வெள்ளியர்; கரியர்;செய்யர்; விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர்; ஊழி ஊழி உலகம் அது ஏத்த நின்ற
பள்ளியர்; நெஞ்சத்து உள்ளார்; பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியர்; கள்ளம் தீர்ப்பார்-திருச் செம்பொன்பள்ளியாரே.
உரை
   
287தந்தையும் தாயும் ஆகித் தானவன்; ஞானமூர்த்தி;
முந்திய தேவர் கூடி முறை முறை இருக்குச் சொல்லி,
“எந்தை, நீ சரணம்!” என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச்
சிந்தையுள் சிவம் அது ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.
உரை
   
288ஆறு உடைச் சடையர் போலும்; அன்பருக்கு அன்பர் போலும்;
கூறு உடை மெய்யர்போலும்; கோள் அரவு அரையர்போலும்;
நீறு உடை அழகர்போலும்-நெய்தலே கமழும் நீர்மைச்
சேறு உடை கமல வேலித் திருச் செம்பொன்பள்ளியாரே.
உரை
   
289ஞாலமும் அறிய வேண்டின்,”நன்று” என வாழல் உற்றீர்
காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழிய கில்லீர்
கோலமும் வேண்டா; ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில்
சீலமும் நோன்பும் ஆவார், திருச் செம்பொன்பள்ளியாரே.
உரை
   
290புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்;
எரி, காலே, மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்;
தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலம் கண்ட எந்தை-திருச் செம்பொன்பள்ளியாரே.
உரை
   
291கார் உடைக் கொன்றைமாலை கதிர் மதி அரவினோடும்
நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி உள்ள
பாரொடு விண்ணும், மண்ணும், பதினெட்டுக் கணங்கள், ஏத்தச்
சீரொடு பாடல் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.
உரை
   
292ஓவாத மறைவல்லானும், ஓத நீர்வண்ணன், காணா
மூவாத பிறப்பு இலாரும்; முனிகள் ஆனார்கள் ஏத்தும்
பூ ஆன மூன்று முந்நூற்று அறுபதும் ஆகும் எந்தை;
தேவாதிதேவர், என்றும்,-திருச் செம்பொன்பள்ளியாரே.
உரை
   
293அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும்,
செங்கண் வெள் ஏறு அது ஏறும்-திருச் செம்பொன்பள்ளியாரே.
உரை