4.34 திருமறைக்காடு
திருநேரிசை
334தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னை,
பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்து
“காரிகை, அஞ்சல்!” என்பார்-கலி மறைக்காடனாரே.
உரை
   
335முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர் கோனை
நக்கு இருந்து ஊன்றிச் சென்னி நாள்மதி வைத்த எந்தை;
அக்கு, அரவு, ஆமை, பூண்ட அழகனார், கருத்தினாலே;-
தெக்கு நீர்த் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே.
உரை
   
336மிகப் பெருத்து உலாவ மிக்கான் நக்கு, ஒரு தேர் கடாவி,
“அகப்படுத்து!” என்று தானும் ஆண்மையால் மிக்கு, அரக்கன்
உகைத்து எடுத்தான், மலையை ஊன்றலும், அவனை ஆங்கே
நகைப்படுத்து அருளினான் ஊர்-நால் மறைக்காடுதானே.
உரை
   
337அந்தரம் தேர் கடாவி, “ஆர் இவன்?” என்று சொல்லி,
உந்தினான் மாமலையை ஊன்றலும், ஒள் அரக்கன்
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டு அலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார்-திரு மறைக்காடனாரே.
உரை
   
338தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன் வலி உடையன் ஆகி,
கடுக்க ஓர் தேர் கடாவி, “கை இருபதுகளாலும்
எடுப்பன், நான்; என்ன பண்டம்!” என்று எடுத்தானை ஏங்க
அடுக்கவே வல்லன் ஊர் ஆம்-அணி மறைக்காடு தானே.
உரை
   
339நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்,
“கோள் பிடித்து ஆர்த்த கையான், கொடியான், மா வலியன்” என்று;
நீள் முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கல் உற்றான்
தோள் முடி நெரிய வைத்தார்-தொல் மறைக்காடனாரே.
உரை
   
340பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன், “மா வலியன்” என்று
பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்கோனைக்
கத்தி வாய் கதற, அன்று, கால்விரல் ஊன்றியிட்டார்-
முத்து வாய்த் திரைகள் மோதும்-முது மறைக்காடனாரே.
உரை
   
341பக்கமே விட்ட கையான், பாங்கு இலா மதியன் ஆகி,
புக்கனன் மா மலைக் கீழ், போதும் ஆறு அறியமாட்டான்,
மிக்க மா மதிகள் கெட்டு, வீரமும் இழந்த ஆறே
நக்கன, பூதம் எல்லாம்; நான் மறைக்காடனாரே!
உரை
   
342நாண் அஞ்சு கையன் ஆகி, நல் முடி பத்தினோடு
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி,
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை, அன்று(வ்)
ஏண் அஞ்சு கைகள் செய்தார்-எழில் மறைகாடனாரே.
உரை
   
343கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊட,
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான், மலையை,
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட,
அம் கை வாள் அருளினான் ஊர்- அணி மறைக்காடுதானே.
உரை