4.35 திருஇடைமருது
திருநேரிசை
344காடு உடைச் சுடலை நீற்றார்; கையில் வெண் தலையர்; தையல்
பாடு உடைப் பூதம் சூழப் பரமனார்- மருதவைப்பில்
தோடு உடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த
ஏடு உடைக் கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே.
உரை
   
345முந்தையார்; முந்தி உள்ளார்; மூவர்க்கும் முதல்வர் ஆனார்
சந்தியார்; சந்தி உள்ளார்; தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார்; சிந்தை உள்ளார்; சிவநெறி அனைத்தும் ஆனார்
எந்தையார்; எம்பிரானார்-இடைமருது இடம் கொண்டாரே.
உரை
   
346கார் உடைக் கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு
நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி ஆய
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர்-பொன்னித் தென்பால்
ஏர் உடைக் கமலம் ஓங்கும் இடைமருது இடம் கொண்டாரே.
உரை
   
347விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் நான்கும், அங்கம்,
பண்ணினார்; பண்ணின் மிக்க பாடலார்; பாவம் தீர்க்கும்
கண்ணினார்; கண்ணின் மிக்க நுதலினார்; காமற் காய்ந்த
எண்ணினார்; எண்ணின் மிக்கார்- இடைமருது இடம்கொண்டாரே.
உரை
   
348வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்த,
பூதங்கள் பாடி ஆடல் உடையவன்; புனிதன்; எந்தை;
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை-
ஏதங்கள் தீர நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே.
உரை
   
349பொறிஅரவு அரையில் ஆர்த்து, பூதங்கள் பலவும், சூழ,
முறிதரு வன்னி கொன்றை, முதிர்சடை மூழ்க வைத்து,
மறிதரு கங்கை தங்க வைத்தவர்-எத்திசையும்
ஏறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம் கொண்டாரே.
உரை
   
350படர் ஒளி சடையினுள்ளால் பாய் புனல் அரவினோடு
சுடர் ஒளி மதியம் வைத்துத் தூ ஒளி தோன்றும் எந்தை;
அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர்; அன்பர் தங்கள்
இடர் அவை கெடவும் நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே.
உரை
   
351கமழ்தரு சடையினுள்ளால் கடும் புனல் அரவினோடும்
தவழ்தரு மதியம் வைத்து, தன் அடி பலரும் ஏத்த,
மழு அது வலங்கை ஏந்தி, மாது ஒருபாகம் ஆகி,
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம் கொண்டாரே.
உரை
   
352பொன் திகழ் கொன்றை மாலை, புதுப்புனல், வன்னி, மத்தம்,
மின்திகழ் சடையில் வைத்து, மேதகத் தோன்றுகின்ற
அன்று அவர் அளக்கல் ஆகா அனல்-எரி ஆகி நீண்டாா
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம் கொண்டாரே.
உரை
   
353மலை உடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்கத்
தலை உடன் அடர்த்து, மீண்டே தலைவனா அருள்கள் நல்கி,
சிலை உடை மலையை வாங்கித் திரி புரம் மூன்றும் எய்தார்-
இலை உடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே.
உரை