4.37 திருநெய்த்தானம்
திருநேரிசை
364காலனை வீழச் செற்ற கழல் அடி இரண்டும் வந்து என்
மேல ஆய் இருக்கப் பெற்றேன்; மேதகத் தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்த(அ)னைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே.
உரை
   
365காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி,
தூபமும் தீபம் காட்டித் தொழுமவர்க்கு அருள்கள் செய்து,
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வு உற நினைந்த ஆறே!
உரை
   
366பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள் உத்தமன்; ஊழிஆய
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று
குறைதரும் அடியவர்க்குக் குழகனைக் கூடல் ஆமே.
உரை
   
367வடி தரு மழு ஒன்று ஏந்தி, வார்சடை மதியம் வைத்து
பொடி தரு மேனிமேலே புரிதரு நூலர் போலும்-
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி,
அடி தரு கழல்கள் ஆர்ப்ப, ஆடும் எம் அண்ணலாரே.
உரை
   
368காடு இடம் ஆக நின்று, கனல்- எரி கையில் ஏந்தி,
பாடிய பூதம் சூழ, பண் உடன் பலவும் சொல்லி
ஆடிய கழலர், சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும்
கூடிய குழகனாரைக் கூடும் ஆறு அறிகிலேனே!
உரை
   
369வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ,
தான் அவர்க்கு அருள்கள் செய்யும் சங்கரன்; செங்கண் ஏற்றன்;
தேன் அமர் பொழில்கள் சூழத் திகழும் நெய்த்தானம் மேய
கூன் இளமதியினானைக் கூடும் ஆறு அறிகிலேனே!
உரை
   
370கால் அதிர்கழல்கள் ஆர்ப்ப, கனல்-எரி கையில் வீசி,
ஞாலமும் குழிய நின்று, நட்டம் அது ஆடுகின்ற
மேலவர்-முகடு தோய விரிசடை திசைகள் பாய
மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே.
உரை
   
371பந்தித்த சடையின் மேலே பாய்புனல் அதனை வைத்து
அந்திப்போது அனலும் ஆடி, அடிகள், ஐயாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்
சிந்திப்பார் சிந்தை உள்ளார்-திருந்து நெய்த்தானனாரே.
உரை
   
372சோதி ஆய்ச் சுடரும் ஆனார்; சுண்ணவெண்சாந்து பூசி
ஓதி வாய் உலகம் ஏத்த, உகந்து தாம் அருள்கள் செய்வார்
ஆதி ஆய் அந்தம் ஆனார்-யாவரும் இறைஞ்சி ஏத்த,
நீதி ஆய் நியமம் ஆகி, நின்ற நெய்த்தானனாரே.
உரை
   
373இலை உடைப்படை கை ஏந்தும் இலங்கையர் மன்னன் தன்னைத்
தலைஉடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து,
சிலை உடன் கணையைச் சேர்த்து, திரிபுரம் எரியச் செற்ற
நிலை உடை அடிகள் போலும்-நின்ற நெய்த்தானனாரே.
உரை