4.39 திருஐயாறு
திருநேரிசை
384குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத்
துண்டனே! சுடர் கொள் சோதீ! தூ நெறி ஆகி நின்ற
அண்டனே! அமரர் ஏறே! திரு ஐயாறு அமர்ந்த தேனே!
தொண்டனேன், தொழுது உன் பாதம் சொல்லி, நான் திரிகின்றேனே.
உரை
   
385பீலி கை இடுக்கி, நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி,
வாலிய தறிகள் போல மதி இலார் பட்டது என்னே!
வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே!
உரை
   
386தட்டு இடு சமணரோடே தருக்கி, நான் தவம் என்று எண்ணி,
ஒட்டிடு மனத்தினீரே! உம்மை யான் செய்வது என்னே!
மொட்டு இடு கமலப் பொய்கைத் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஒட்டிடும் உள்ளத்தீரே! உம்மை நான் உகந்திட்டேனே.
உரை
   
387பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்;
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே.
உரை
   
388கடுப் பொடி அட்டி மெய்யில், கருதி ஓர் தவம் என்று எண்ணி,
வடுக்களோடு இசைந்த நெஞ்சே! மதி இலி பட்டது என்னே!
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
அடுத்து நின்று உன்னு, நெஞ்சே! அருந்தவம் செய்த ஆறே!
உரை
   
389துறவி என்று அவம் அது ஓரேன்; சொல்லிய சொலவு செய்து(வ்)
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி;
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை
மறவு இலா நெஞ்சமே! நல்மதி உனக்கு அடைந்தஆறே!
உரை
   
390பல் உரைச் சமணரோடே பலபல காலம் எல்லாம்
சொல்லிய சொலவு செய்தேன்; சோர்வன், நான் நினைந்தபோது;
மல்லிகை மலரும் சோலைத் திரு ஐயாறு அமர்ந்த தேனை!
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்த போது இனியஆறே!
உரை
   
391மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக,-
எண் இலாச் சமணரோடே இசைந்தனை, ஏழை நெஞ்சே!-
தெண் நிலா எறிக்கும் சென்னித் திரு ஐயாறு அமர்ந்த தேனைக்
கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தஆறே!
உரை
   
392குருந்தம் அது ஒசித்த மாலும், குலமலர் மேவினானும்,
திருந்து நல்-திரு வடீயும் திருமுடி காணமாட்டார்
அருந்தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனைப்
பொருந்தி நின்று உன்னு, நெஞ்சே! பொய் வினை மாயும் அன்றே.
உரை
   
393அறிவு இலா அரக்கன் ஓடி, அருவரை எடுக்கல் உற்று,
முறுகினான்; முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி
நிறுவினான், சிறுவிர(ல்)லால்; நெரிந்து போய் நிலத்தில் வீழ,
அறிவினால் அருள்கள் செய்தான், திரு ஐயாறு அமர்ந்த தேனே.
உரை