4.40 திருஐயாறு
திருநேரிசை
394தான் அலாது உலகம் இல்லை; சகம் அலாது அடிமை இல்லை;
கான் அலாது ஆடல் இல்லை; கருதுவார் தங்களுக்கு
வான் அலாது அருளும் இல்லை; வார் குழல் மங்கையோடும்
ஆன் அலாது ஊர்வது இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.
உரை
   
395ஆல் அலால் இருக்கை இல்லை; அருந்தவ முனிவர்க்கு அன்று
நூல் அலால் நொடிவது இல்லை; நுண் பொருள் ஆய்ந்து கொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க, வேலை
ஆல் அலால் அமுதம் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.
உரை
   
396நரி புரி சுடலை தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை;
சுரி புரி குழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை;
தெரி புரி சிந்தையார்க்குத் தெளிவு அலால் அருளும் இல்லை-
அரி புரி மலர்கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே.
உரை
   
397தொண்டு அலால்-துணையும் இல்லை; தோல் அலாது உடையும் இல்லை;
கண்டு அலாது அருளும் இல்லை; கலந்த பின் பிரிவது இல்லை-
“பண்டை நால்மறைகள் காணாப் பரிசினன்” என்று என்று எண்ணி,
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே.
உரை
   
398எரி அலால் உருவம் இல்லை; ஏறு அலால் ஏறல் இல்லை;
கரி அலால் போர்வை இல்லை; காண் தகு சோதியார்க்கு,
பிரி இலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்-
அரி அலால்-தேவி இல்லை, ஐயன் ஐயாறனார்க்கே.
உரை
   
399என்பு அலால் கலனும் இல்லை; எருது அலால் ஊர்வது இல்லை;
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை;
துன்பு இலாத் தொண்டர் கூடித் தொழுது அழுது ஆடிப் பாடும்
அன்பு அலால் பொருளும் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.
உரை
   
400கீள் அலால் உடையும் இல்லை; கிளர் பொறி அரவம் பைம் பூண்
தோள் அலால்-துணையும் இல்லை; தொத்து அலர்கின்ற வேனில்
வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை; மீள
ஆள் அலால் கைம்மாறு இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.
உரை
   
401சகம் அலாது அடிமை இல்லை; தான் அலால்-துணையும் இல்லை;
நகம் எலாம் தேயக் கையால் நாள் மலர் தொழுது தூவி,
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து, ஏத்தும் தொண்டர்
அகம் அலால் கோயில் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.
உரை
   
402உமை அலாது உருவம்- இல்லை; உலகு அலாது உடையது இல்லை-
நமை எலாம் உடையர் ஆவர்; நன்மையே; தீமை இல்லை;
கமை எலாம் உடையர் ஆகிக் கழல் அடி பரவும் தொண்டர்க்கு
அமைவு இலா அருள் கொடுப்பார் -ஐயன் ஐயாறனார்க்கே.
உரை
   
403மலை அலால் இருக்கை இல்லை; மதித்திடா அரக்கன் தன்னைத்
தலை அலால் நெரித்தது இல்லை; தடவரைக் கீழ் அடர்த்து;
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை-
அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே.
உரை