4.44 திருக்கச்சி ஏகம்பம்
திருநேரிசை
434நம்பனை, நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும்
அம்பனை, அமுதை, ஆற்றை, அணி பொழில் கச்சியுள் ஏ-
கம்பனை, கதிர் வெண்திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னை;
செம்பொனை, பவளத்தூணை, சிந்தியா எழுகின்றேனே.
உரை
   
435ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது துளை உடைத்து ஆய்;
அரை முழம் அதன் அக(ல்)லம்; அதனில் வாழ் முதலை ஐந்து;
பெரு முழை வாய் தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன்
கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே!
உரை
   
436மலையினார் மகள் ஓர் பாகம் மைந்தனார், மழு ஒன்று ஏந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழச் செற்ற செல்வர்,
இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை,
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கும் தலைவர் தாமே!
உரை
   
437பூத்த பொன் கொன்றமாலை புரி சடைக்கு அணிந்த செல்வர்
தீர்த்தம் ஆம் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்து(வ்)
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை,
வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன்; மால்கொடு மயங்கினேனே!
உரை
   
438மையின் ஆர் மலர் நெடுங்கண் மங்கை ஓர் பங்கர் ஆகி,
கையில் ஓர் கபாலம் ஏந்தி, கடை தொறும் பலி கொள்வார், தாம்
எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை,
கையினால் -தொழ வல்லார்க்குக் கடுவினை களையல் ஆமே.
உரை
   
439தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன், எங்கள்
அரு வினை அகல நல்கும் அண்ணலை, அமரர் போற்றும்
திரு வினை, திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல
உரு வினை, உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின்றேனே.!
உரை
   
440கொண்டது ஓர் கோலம் ஆகிக் கோலக்கா உடைய கூத்தன்,
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான்,
எண் திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன் தன்னை,
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே.
உரை
   
441படம் உடை அரவினோடு பனி மதி அதனைச் சூடி,
கடம் உடை உரிவை மூடிக் கண்டவர் அஞ்ச, அம்ம!
இடம் உடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவினான் தன்
நடம் உடை ஆடல் காண ஞாலம் தான் உய்ந்த ஆறே!
உரை
   
442பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந் தண் மார்பர்
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று,
குன்றியில் அடுத்த மேனிக் குவளை அம் கண்டர்; எம்மை
இன் துயில் போது கண்டார்; இனியர்-ஏகம்பனாரே.
உரை
   
443துருத்தியார், பழனத்து உள்ளார், தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார் அவர் அவர்க்கு அருள்கள் செய்து(வ்)
எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே!
உரை