4.48 திருஆப்பாடி
திருநேரிசை
466கடல் அகம் ஏழினோடும் பவனமும் கலந்து, விண்ணும்
உடல் அகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று,
தடம் மலர்க் கந்த மாலை தண்மதி பகலும் ஆகி,
மடல் அவிழ் கொன்றை சூடி, மன்னும்-ஆப்பாடியாரே.
உரை
   
467ஆதியும் அறிவும் ஆகி, அறிவினுள் செறிவும் ஆகி,
சோதியுள் சுடரும் ஆகி, தூநெறிக்கு ஒருவன் ஆகி,
பாதியில் பெண்ணும் ஆகி, பரவுவார் பாங்கர் ஆகி,
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும்-ஆப்பாடியாரே.
உரை
   
468எண் உடை இருக்கும் ஆகி, இருக்கின் உள் பொருளும் ஆகி,
பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கர் ஆகி,
கண் ஒரு நெற்றி ஆகி, கருதுவார் கருதல் ஆகாப்
பெண் ஒரு பாகம் ஆகி, பேணும்-ஆப்பாடியாரே.
உரை
   
469அண்டம் ஆர் அமரர் கோமான் -ஆதி, எம் அண்ணல், -பாதம்
கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான், தாபரத்தை;
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறியக் கண்டு
தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர், ஆப்பாடியாரே.
உரை
   
470சிந்தையும் தெளிவும் ஆகி, தெளிவினுள் சிவமும் ஆகி,
வந்த நன் பயனும் ஆகி, வாணுதல் பாகம் ஆகி,
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென் கரை மேல் மன்னி
அந்த மோடு அளவு இலாத அடிகள்-ஆப்பாடியாரே.
உரை
   
471வன்னி, வாள் அரவு, மத்தம், மதியமும், ஆறும், சூடி,
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப் பொருள் பயனும் ஆகி,
கன்னி ஓர் பாகம் ஆகி, கருதுவார் கருத்தும் ஆகி,
இன் இசை தொண்டர் பாட, இருந்த ஆப்பாடியாரே.
உரை
   
472உள்ளும் ஆய்ப் புறமும் ஆகி, உருவும் ஆய் அருவும் ஆகி,
வெள்ளம் ஆய்க் கரையும் ஆகி, விரி கதிர் ஞாயிறு ஆகி,
கள்ளம் ஆய்க் கள்ளத்து உள்ளார் கருத்தும் ஆய் அருத்தம் ஆகி,
அள்ளுவார்க்கு அள்ளல் செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே!
உரை
   
473மயக்கம் ஆய்த் தெளிவும் ஆகி, மால்வரை வளியும் ஆகி,
தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி, சிந்தையுள் ஒன்றி நின்று(வ்)
இயக்கம் ஆய், இறுதி ஆகி, எண் திசைக்கு இறைவர் ஆகி,
அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர்-ஆப்பாடியாரே.
உரை
   
474ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை
பேர் ஒளி உருவினானைப் பிரமனும் மாலும் காணாச்
சீர் அவை பரவி ஏத்திச் சென்று அடி வணங்குவார்க்குப்
பேர் அருள் அருளிச் செய்வார், பேணும் ஆப்பாடியாரே.
உரை
   
475திண் திறல் அரக்கன் ஓடி, சீ கயிலாயம் தன்னை
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும், ஏழை அஞ்ச,
விண்டு இற நெறிய ஊன்றி, மிகக் கடுத்து அலறி வீழ,
பண் திறல் கேட்டு உகந்த பரமர்-ஆப்பாடியாரே.
உரை