4.51 திருக்கோடிகா
திருநேரிசை
488நெற்றி மேல் கண்ணினானே! நீறு மெய் பூசினானே!
கற்றைப் புன் சடையினானே! கடல் விடம் பருகினானே!
செற்றவர் புரங்கள் மூன்றும் செவ் அழல் செலுத்தினானே!
குற்றம் இல் குணத்தினானே! கோடிகா உடைய கோவே!
உரை
   
489கடி கமழ் கொன்றையானே! கபாலம் கை ஏந்தினானே!
வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகத்தானே!
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள் செய்வானே!
கொடி அணி விழவு அது ஓவாக் கோடிகா உடைய கோவே!
உரை
   
490நீறு மெய் பூசினானே! நிழல் திகழ் மழுவினானே!
ஏறு உகந்து ஏறினானே! இருங் கடல் அமுது ஒப்பானே!
ஆறும் ஓர் நான்கு வேதம்! அறம் உரைத்து அருளினானே!
கூறும் ஓர் பெண்ணினானே! கோடிகா உடைய கோவே!
உரை
   
491காலனைக் காலால் செற்று, அன்று, அருள் புரி கருணையானே!
நீலம் ஆர் கண்டத்தானே! நீள் முடி அமரர்கோவே!
ஞாலம் ஆம் பெருமையானே! நளிர் இளந்திங்கள் சூடும்
கோலம் ஆர் சடையினானே! கோடிகா உடைய கோவே!
உரை
   
492பூண் அரவு ஆரத்தானே! புலி உரி அரையினானே!
காணில் வெண் கோவண(ம்) மும், கையில் ஓர் கபாலம் ஏந்தி,
ஊணும் ஊர்ப் பிச்சையானே! உமை ஒரு பாகத்தானே!
கோணல் வெண் பிறையினானே! கோடிகா உடைய கோவே!
உரை
   
493கேழல் வெண் கொம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே!
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன்? எந்தை பெம்மான்!
மாழை ஒண்கண்ணினார்கள் வலை தனில் மயங்குகின்றேன்;
கூழை ஏறு உடைய செல்வா! கோடிகா உடைய கோவே!
உரை
   
494அழல் உமிழ் அங்கையானே! அரிவை ஓர் பாகத்தானே!
தழல் உமிழ் அரவம் ஆர்த்துத் தலை தனில் பலி கொள்வானே!
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள்
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே!
உரை
   
495ஏ அடு சிலையினாலே புரம் அவை எரி செய்தானே!
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே!
ஆவடு துறை உளானே! ஐவரால் ஆட்டப் பட்டேன்!
கோ அடு குற்றம் தீராய், கோடிகா உடைய கோவே!
உரை
   
496ஏற்ற நீர்க் கங்கையானே! இரு நிலம் தாவினானும்,
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன், இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கல் உற்றார்க்கு அழல் உரு ஆயினானே!
கூற்றுக்கும் கூற்று அது ஆனாய்! கோடிகா உடைய கோவே!
உரை
   
497பழக நான் அடிமை செய்வேன்-பசுபதீ! பாவ நாசா!
மழ களியானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே! அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும்
குழகனே! கோல மார்பா! கோடிகா உடைய கோவே!
உரை