4.61 திருஇராமேச்சுரம்
திருநேரிசை
588பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து, தக்க
வாசம் மிக்க(அ)லர்கள் கொண்டு, மதியினால் மால் செய் கோயில்
நேசம் மிக்கு அன்பினாலே நினைமின், நீர், நின்று நாளும்!
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுர(ம்)மே.
உரை
   
589“முற்றின, நாள்கள்” என்று முடிப்பதே காரணம்(ம்) ஆய்
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர் தம்மைச்
செற்ற மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைப்
பற்றி, நீ பரவு,-நெஞ்சே!-படர்சடை ஈசன்பாலே!
உரை
   
590கடல் இடை மலைகள் தம்மால் அடைத்து, மால், கருமம் முற்றி,
திடல் இடைச் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தொடல் இடை வைத்து நாவில் சுழல்கின்றேன், தூய்மை இன்றி,
உடல் இடை நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு, நானே.
உரை
   
591குன்று போல்-தோள் உடைய குணம் இலா அரக்கர் தம்மைக்
கொன்று போர் ஆழி அம் மால் வேட்கையால் செய்த கோயில்-
நன்று போல் நெஞ்சமே! நீ நன்மையை அறிதியாயில்,
சென்று நீ தொழுது உய்கண்டாய்!-திரு இராமேச்சுர(ம்)மே.
உரை
   
592வீரம் மிக்கு எயிறு காட்டி விண் உற நீண்டு அரக்கன்
கூரம் மிக்கவனைச் சென்று கொன்று உடன் கடல் படுத்துத்
தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தைக்
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே.
உரை
   
593“ஆர், வலம் நம்மின் மிக்கார்?’ என்ற அவ் அரக்கர் கூடிப்
போர் வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தைச்
சேர்,-மட நெஞ்சமே!-நீ செஞ்சடை எந்தைபாலே!
உரை
   
594வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார் தம்மை எல்லாம்
போக்கினால் புடைத்து, அவர்கள் உயிர் தனை உண்டு, மால் தான்
தேக்கு நீர் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை
நோக்கினால் வணங்குவார்க்கு நோய்வினை நுணுகும் அன்றே.
உரை
   
595பலவும் நாள் தீமை செய்து பார் தன் மேல் குழுமி வந்து
கொலை விலார் கொடியர் ஆய அரக்கரைக் கொன்று வீழ்த்த,
சிலையினான் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம்; தவம் அது ஆமே.
உரை
   
596கோடி மா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்து, பின் அன்பு கொண்டு,
தேடி, மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை
நாடி வாழ்!-நெஞ்சமே, நீ!-நன்நெறி ஆகும் அன்றே.
உரை
   
597வன்கண்ணர், வாள் அரக்கர், -வாழ்வினை ஒன்று அறி(ய்)யார்
புன் கண்ணர் ஆகி நின்று-போர்கள் செய்தாரை மாட்டி,
செங்கண் மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம், தலைவன் பாலே.
உரை
   
598வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர் கோனை
விரைய முற்று அற ஒடுக்கி, மீண்டு மால் செய்த கோயில்-
திரைகள் முத்தால் வணங்கும்-திரு இராமேச்சுரத்தை
உரைகள் பத்தால் உரைப்பார், உள்குவார், அன்பினாலே.
உரை