4.62 திருஆலவாய்
திருநேரிசை,
599“வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!” என்று என்று
ஓதியே, மலர்கள் தூவி, ஒடுங்கி, நின் கழல்கள் காண-
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்! படர்சடை மதியம் சூடும்
ஆதியே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
உரை
   
600“நம்பனே! நான் முகத்தாய்! நாதனே! ஞான மூர்த்தி!
என் பொனே! ஈசா!” என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்-
அன்பனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
உரை
   
601ஒரு மருந்து ஆகி உள்ளாய், உம்பரோடு உலகுக்கு எல்லாம்;
பெரு மருந்து ஆகி நின்றாய்; பேர் அமுதின் சுவை ஆய்க்
கரு மருந்து ஆகி உள்ளாய்;-ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அரு மருந்து! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
உரை
   
602செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர் தேவே!
மை அணி கண்டத்தானே! மான்மறி மழு ஒன்று ஏந்தும்
சைவனே!-சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன்
ஐயனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
உரை
   
603வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்
உண்டதும் இல்லை; சொல்லில், உண்டது நஞ்சு தன்னை;
பண்டு உனை நினைய மாட்டாப் பளகனேன் உளம் அது ஆர,
அண்டனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
உரை
   
604“எஞ்சல் இல் புகல் இது” என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நன் பொருள் பதமே! நாயேற்கு
“அஞ்சல்!” என்று-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
உரை
   
605வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்
செழு மலர்ப்பாதம் காண-தெண் திரை நஞ்சம் உண்ட
குழகனே! கோலவில்லீ! கூத்தனே! மாத்து ஆய் உள்
அழகனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
உரை
   
606நறுமலர் நீரும் கொண்டு நாள் தொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறி கடல் வண்ணன் பாகா! மாமறை அங்கம் ஆறும்
அறிவனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
உரை
   
607“நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரசு அது ஆள அருளினாய்” என்று திண்ணம்
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக
அலந்தனன்;-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
உரை
   
608பொடிக்கொடு பூசி, பொல்லாக் குரம்பையில் புந்தி, ஒன்றி,
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி, நான் இருக்கமாட்டேன்-
“எடுப்பன்” என்று இலங்கைக் கோன் வந்து எடுத்தலும், இருபது(த்) தோள
அடர்த்தனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
உரை