4.73 திருச்சேறை
திருநேரிசை
707பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்
அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்
திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை
   
708ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய் என்று எண்ணி, மயக்கில் வீழ்ந்து, அழுந்துவேனைப்
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம்
தீர்த்து அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை
   
709ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம்
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெங் கானகத்துச்
சென்று அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை
   
710அஞ்சையும் அடக்கி, ஆற்றல் உடையனாய், அநேக காலம்
வஞ்சம் இல் தவத்துள் நின்று, மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை
செஞ்சடை ஏற்றார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை
   
711நிறைந்த மா மணலைக் கூப்பி, நேசமோடு ஆவின் பாலைக்
கறந்து கொண்டு ஆட்ட, கண்டு கறுத்த தன் தாதை தாளை
எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்னச்
சிறந்த பேறு அளித்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை
   
712விரித்த பல்கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம், கை
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகி, வேழம்
உரித்து, உமை அஞ்சக் கண்டு, ஒண் திரு மணிவாய் விள்ளச்
சிரித்து, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை
   
713சுற்றும் முன் இமையோர் நின்று, தொழுது, தூ மலர்கள் தூவி,
“மற்று எமை உயக்கொள்!” என்ன, மன்னு வான் புரங்கள் மூன்றும்
உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல்வாயின் வீழச்
செற்று, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை
   
714முந்தி இவ் உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும்,
“எம் தனி நாதனே!” என்று இறைஞ்சி நின்று ஏத்தல் செய்ய,
அந்தம் இல் சோதி தன்னை அடி முடி அறியா வண்ணம்
செந்தழல் ஆனார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை
   
715ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி,
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று,
மருவி, “எம்பெருமான்!” என்ன, மலர் அடி மெள்ள வாங்கித்
திரு அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
உரை