4.78 பொது
குறைந்த திரு நேரிசை
754வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் வளாகம் தன்னுள்
சென்றிலேன்; ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்;
நின்று உளே துளும்புகின்றேன்; நீசனேன்; ஈசனேயோ!
இன்று உளேன்! நாளை இல்லேன்!-என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
755கற்றிலேன், கலைகள் ஞானம்; கற்றவர் தங்களோடும்
உற்றிலேன்; ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன்;
பெற்றிலேன்; பெருந் தடங்கண் பேதையார் தமக்கும் பொல்லேன்;
எற்று உளேன்? இறைவனே!-நான் என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
756மாட்டினேன், மனத்தை முன்னே; மறுமையை உணர மாட்டேன்;
மூட்டி, நான், முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன்;
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம் தன்னை;
ஈட்டினேன்; களைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
757கரைக் கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன்
உரைக் கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன்; ஆதலாலே,
அரைக் கிடந்து அசையும் நாகம் அசைப்பனே! இன்ப வாழ்க்கைக்கு
இரைக்கு இடைந்து உருகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
758செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன், தேவ தேவன்,
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
759பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர் தமைப் புறமே பேசக்
கூச்சு இலேன்; ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன்;
நாச் சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணர மாட்டேன்
ஏச்சுளே நின்று, மெய்யே என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
760தேசனை, தேசம் ஆகும் திருமால் ஓர் பங்கன் தன்னை,
பூசனை, புனிதன் தன்னை, புணரும் புண்டரிகத்தானை,
நேசனை, நெருப்பன் தன்னை, நிவஞ்சகத்து அகன்ற செம்மை
ஈசனை, அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
761விளைக்கின்ற வினையை நோக்கி, வெண் மயிர் விரவி, மேலும்
முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன், இயல; வெள்ளம்
திளைக்கின்ற முடியினான் தன் திருவடி பரவமாட்டாது
இளைக்கின்றேன், இருமி ஊன்றி;-என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
762விளைவு அறிவு இலாமையாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து
களைகணும் இல்லேன்; எந்தாய்! காமரம் கற்றும் இல்லேன்!
தளை அவிழ் கோதை நல்லார் தங்களோடு இன்பம் எய்த
இளையனும் அல்லேன்; எந்தாய்!-என் செய்வான் தோன்றினேனே!
உரை
   
763வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதம் கேட்ட
அட்ட மா மூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும்
எள்-தனை எட்ட மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
உரை