4.81 கோயில்
திருவிருத்தம்
780கரு நட்ட கண்டனை, அண்டத் தலைவனை, கற்பகத்தை,
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை, செந் தீ முழங்கத்
திரு நட்டம் ஆடியை, தில்லைக்கு இறையை, சிற்றம்பலத்துப்
பெரு நட்டம் ஆடியை, “வானவர் கோன்” என்று வாழ்த்துவனே.
உரை
   
781ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை;
கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா;
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!-
“என்று வந்தாய்?” என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.
உரை
   
782கல்மனவீர்! கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே?
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன் மலையில் வெள்ளிக் குன்று அது போலப் பொலிந்து இலங்கி,
என் மனமே ஒன்றிப் புக்கனன்; போந்த சுவடு இல்லையே!
உரை
   
783குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
உரை
   
784வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி; மதித்திடுமின்!
பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன்,-பத்தர் உள்ள
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான், தில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ, நம் தம் கூழைமையே?
உரை
   
785பூத்தன, பொன்சடை பொன் போல் மிளிர; புரி கணங்கள்
ஆர்த்தன, கொட்டி; அரித்தன, பல் குறள் பூதக்கணம்;
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக்
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ, என் தன் கோல்வளைக்கே?
உரை
   
786முடி கொண்ட மத்தமும், முக்கண்ணின் நோக்கும், முறுவலிப்பும்,
துடி கொண்ட கையும், துதைந்த வெண் நீறும், சுரி குழலாள்
படி கொண்ட பாகமும், பாய் புலித்தோலும், என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா, தில்லை அம்பலக் கூத்தன் குரைகழலே!
உரை
   
787படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்;
இடைக்கலம் அல்லேன்; எழு பிறப்பும்(ம்) உனக்கு ஆட் செய்கின்றேன்;
துடைக்கினும் போகேன்; தொழுது வணங்கித் தூ நீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய்-அணி தில்லைச் சிற்றம்பலத்து அரனே!
உரை
   
788பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து, புரிசடைகள்
மின் ஒத்து இலங்க, பலி தேர்ந்து, உழலும் விடங்க வேடச்-
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என் அத்தன் ஆடல் கண்டு இன்பு உற்றதால், இவ் இரு நிலமே.
உரை
   
789சாட எடுத்தது, தக்கன் தன் வேள்வியில் சந்திரனை;
வீட எடுத்தது, காலனை; நாரணன் நான்முகனும்
தேட எடுத்தது,-தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ,-நம்மை ஆட்கொண்டதே!
உரை