4.88 திருப்பூந்துருத்தி
திருவிருத்தம்
843மாலினை மால் உற நின்றான், மலை மகள் தன்னுடைய
பாலனை, பால் மதி சூடியை, பண்பு உணரார் மதில் மேல்
போலனை, போர் விடை ஏறியை, பூந்துருத்தி(ம்) மகிழும்
ஆலனை, ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே.
உரை
   
844மறி உடையான், மழுவாளினன், மாமலை மங்கை ஓர்பால்
குறி உடையான், குணம் ஒன்று அறிந்தார் இல்லை; கூறில், அவன்
பொறி உடை வாள் அரவத்தவன்; பூந்துருத்தி(ய்) உறையும்
அறிவு உடை ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே.
உரை
   
845மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெஞ்சிலை கோத்து ஓர் அம்பால்
அறுத்தனை, ஆல் அதன் கீழனை, ஆல்விடம் உண்டு அதனைப்
பொறுத்தனை, பூதப்படையனை, பூந்துருத்தி(ய்) உறையும்
நிறுத்தனை, நீலமிடற்றனை-யான் அடி போற்றுவதே.
உரை
   
846உருவினை, ஊழி முதல்வனை, ஓதி நிறைந்து நின்ற
திருவினை, தேசம் படைத்தனை, சென்று அடைந்தேனுடைய
பொரு வினை எல்லாம் துரந்தனை, பூந்துருத்தி(ய்) உறையும்
கருவினை, கண் மூன்று உடையனை-யான் அடி போற்றுவதே.
உரை
   
847தக்கன்தன் வேள்வி தகர்த்தவன்,-சாரம், அது(வ்) அன்று-கோள
மிக்கன மும்மதில் வீய ஓர் வெஞ்சிலை கோத்து ஓர் அம்பால்
புக்கனன், பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி(ய்) உறையும்
நக்கனை, நங்கள் பிரான்தனை-நான் அடி போற்றுவதே.
உரை
   
848அருகு அடை மாலையும் தான் உடையான், அழகால் அமைந்த
உரு உடை மங்கையும் தன் ஒரு பால் உலகு ஆயும் நின்றான்,
பொருபடை வேலினன், வில்லினன், பூந்துருத்தி(ய்) உறையும்
திரு உடைத் தேச மதியனை-யான் அடி போற்றுவதே.
உரை
   
849மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்கக்
கன்றியும் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனல் அம்பினால்
பொன்றியும் போகப் புரட்டினன், பூந்துருத்தி(ய்) உறையும்
அன்றியும் செய்த பிரான் தனை-யான் அடி போற்றுவதே.
உரை
   
850மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர் பால் மகிழ்ந்தான்,
“என் நிறம்?” என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார்
பொன் நிறம் மிக்க சடையவன், பூந்துருத்தி(ய்) உறையும்
எல்-நிற எந்தை பிரான் தனை-யான் அடி போற்றுவதே.
உரை
   
851அந்தியை, நல்ல மதியினை, யார்க்கும் அறிவு அரிய
செந்தியை வாட்டும் செம்பொன்னினை, சென்று அடைந்தேனுடைய
புந்தியைப் புக்க அறிவினை, பூந்துருத்தி(ய்) உறையும்
நந்தியை, நங்கள் பிரான் தனை-நான் அடி போற்றுவதே.
உரை
   
852பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு; சடை இடையே
வைக்கையும் வான் இழி கங்கையும்; மங்கை நடுக்கு உறவே
மொய்க்கை அரக்கனை ஊன்றினன், பூந்துருத்தி(ய்) உறையும்
மிக்க நல்வேத விகிர்தனை-நான் அடி போற்றுவதே.
உரை