4.89 திருநெய்த்தானம்
திருவிருத்தம்
853பார் இடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருள
கார் அடைந்த(க்) கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான்
ஊர் அடைந்து இவ் உலகில் பலி கொள்வது நாம் அறியோம்-
நீர் அடைந்த(க்) கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.
உரை
   
854தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய்! நின் திருச்சடை மேல்
பாய்ந்த கங்கைப் புனல் பல்முகம் ஆகிப் பரந்து ஒலிப்ப,
ஆய்ந்து இலங்கும் மழு, வேல், உடையாய்!-அடியேற்கு உரை நீ,
ஏந்து இளமங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே!
உரை
   
855கொன்று அடைந்து ஆடிக் குமைத்திடும் கூற்றம், ஒன்னார் மதில் மேல்
சென்று அடைந்து ஆடி, பொருததும், -தேசம் எல்லாம் அறியும்;-
குன்று அடைந்து ஆடும் குளிர்ப்பொழில் காவிரியின் கரை மேல்,
சென்று அடைந்தார் வினை தீர்க்கும், நெய்த்தானத்து இருந்தவனே!
உரை
   
856கொட்டு முழவு அரவத்தொடு கோலம்பல அணிந்து
நட்டம் பல பயின்று ஆடுவர்; நாகம் அரைக்கு அசைத்துச்
சிட்டர் திரிபுரம் தீ எழச் செற்ற சிலை உடையான்
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.
உரை
   
857கொய்ம் மலர்க் கொன்றை, துழாய், வன்னி, மத்தமும், கூவிளமும்,
மொய்ம்மலர், வேய்ந்த விரிசடைக்கற்றை விண்ணோர் பெருமான்;
மைம்மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர் பால் மகிழ்ந்தான்;
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே.
உரை
   
858பூந்தார் நறுங் கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கு அணிந்து
கூர்ந்து ஆர் விடையினை ஏறி, பல் பூதப்படை நடுவே
போந்தார்-புற இசை பாடவும் ஆடவும் கேட்டு அருளிச்
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே.
உரை
   
859பற்றின பாம்பன்; படுத்த புலி உரித்-தோல் உடையன்;
முற்றின மூன்றும் மதில்களை மூட்டி எரித்து அறுத்தான்;
சுற்றிய பூதப்படையினன்சூலம் மழு ஒருமான்,
செற்று நம் தீவினை தீர்க்கும், நெய்த்தானத்து இருந்தவனே.
உரை
   
860விரித்த சடையினன்; விண்ணவர் கோன்; விடம் உண்ட கண்டன்;
உரித்த கரிஉரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே-
எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டு கொண்ட,
தரித்த உமையவளோடு, நெய்த்தானத்து இருந்தவனே.
உரை
   
861தூங்கான்; துளங்கான்; துழாய், கொன்றை, துன்னிய செஞ்சடை மேல்
வாங்கா மதியமும், வாள் அரவும், கங்கை, தான் புனைந்தான்;
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து
நீங்கான், உமையவளோடு; நெய்த்தானத்து இருந்தவனே.
உரை
   
862ஊட்டி நின்றான், பொரு வானில் அம் மும்மதில் தீ; அம்பினால்
மாட்டி நின்றான்; அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்குக்
காட்டி நின்றான்; கதமாக் கங்கை பாய ஓர் வார்சடையை
நீட்டி நின்றான்திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.
உரை