4.95 திருவீழிமிழலை
திருவிருத்தம்
923வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலே
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திருக்கொன்றை சென்னி வைத்தீர்
மான் பெட்டை நோக்கி மணாளீர்! மணி நீர் மிழலை உள்ள
நான் சட்ட உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
உரை
   
924அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர்! அண்டம் எண்திசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்றீர்! பசு ஏற்று உகந்தீர்
வெந்தழல் ஓம்பும் மிழலை உள்ளீர்!-என்னைத் தென்திசைக்கே
உந்திடும்போது மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
உரை
   
925அலைக்கின்ற நீர், நிலம், காற்று, அனல் அம்பரம், ஆகி நின்றீர்
கலைக்கன்று சேரும் கரத்தீர்! கலைப்பொருள் ஆகி நின்றீர்
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால்
குலைக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
உரை
   
926தீத் தொழிலான் தலை தீயில் இட்டு, செய்த வேள்வி செற்றீர்
பேய்த்தொழிலாட்டியைப் பெற்று உடையீர்! பிடித்துத் திரியும்
வேய்த் தொழிலாளர் மிழலை உள்ளீர்! விக்கி அஞ்சு எழுத்தும்
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
உரை
   
927தோள் பட்ட நாகமும், சூலமும், சுத்தியும், பத்திமையால்
மேற்பட்ட அந்தணர் வீழியும், என்னையும் வேறு உடையீர்
நாள் பட்டு வந்து பிறந்தேன், இறக்க, நமன் தமர்தம்
கோள்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
உரை
   
928கண்டியில் பட்ட கழுத்து உடையீர்! கரிகாட்டில் இட்ட
பண்டியில் பட்ட பரிகலத்தீர்! பதிவீழி கொண்டீர்
உண்டியில், பட்டினி, நோயில், உறக்கத்தில்,-உம்மை, ஐவர்
கொண்டியில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
உரை
   
929தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர்! தூய வெள் எருது ஒன்று
ஏற்றம் கொண்டீர்! எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர்
சீற்றம் கொண்டு என்மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெங்
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
உரை
   
930சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடிச் சொக்கம் பயின்றீர்
பழிப்பட்ட பாம்பு அரைப் பற்று உடையீர்! படர் தீப் பருக
விழிப்பட்ட காமனை வீட்டீர்! மிழலை உள்ளீர்!-பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
உரை
   
931பிள்ளையின் பட்ட பிறைமுடியீர்! மறை ஓத வல்லீர்
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர்! விரிநீர் மிழலை உள்ள
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்தம்
கொள்ளையில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
உரை
   
932கறுக்கொண்டு அரக்கன் கயிலையைப் பற்றிய கையும் மெய்யும்
நெறுக்கென்று இறச் செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர்
வெறிக் கொன்றைமாலை முடியீர்! விரிநீர் மிழலை உள்ள
இறக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
உரை