4.110 “பசுபதி”
திருவிருத்தம்
1031சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, நின் தாள் பரவி,
ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்-இருங் கங்கை என்னும்
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர்ப் பூண் வன முலைமேல்
பாம்பு அலைக்கும் சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
உரை
   
1032உடம்பைத் தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண்டாய்-இருள் ஓடச் செந்தீ
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா! அழலே உமிழும்
படம் பொத்து அரவு அரையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
உரை
   
1033தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும்
மூரித் திரைப் பௌவம் நீக்குகண்டாய்-முன்னை நாள் ஒரு கால்
வேரித் தண் பூஞ் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழச் செந்தீப்
பாரித்த கண் உடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
உரை
   
1034ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்-அண்டமே அளவும்
பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து, வேய்த்தோளி அஞ்சப்
பருவரைத் தோல் உரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
உரை
   
1035இடுக்கு ஒன்றும் இன்றி, எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு
அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய்-அண்டம் எண் திசையும்
சுடர்த் திங்கள் சூடி, சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி,
படர்க்கொண்ட செஞ்சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
உரை
   
1036அடலைக்கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார்
நடலைப் படாமை விலக்கு கண்டாய்-நறுங் கொன்றை, திங்கள்,
சுடலைப் பொடிச்-சுண்ணம், மாசுணம், சூளாமணி, கிடந்து
படரச் சுடர் மகுடா! எம்மை ஆளும் பசுபதியே!
உரை
   
1037துறவித் தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார்
மறவித்தொழில் அது மாற்றுகண்டாய்-மதில் மூன்று உடைய
அறவைத்தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்ப்-
பறவைப்புரம் எரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
உரை
   
1038சித்தத்து உருகி, “சிவன், எம்பிரான்” என்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய்-
மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம்
பத்து உற்று உற நெரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!
உரை