4.113 தனி
திருவிருத்தம்
1060பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் தோள் மிசையே
பவளக்குழை தழைத்தால் ஒக்கும், பல்சடை; அச் சடைமேல்
பவளக்கொழுந்து அன்ன, பைம்முக நாகம்; அந் நாகத்தொடும்,
பவளக்கண் வாலமதி, எந்தை சூடும் பனிமலரே.
உரை
   
1061முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி, வண்டே முரலும்
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய்! பிணி மேய்ந்து இருந்த
இருகால் குரம்பை இது நான் உடையது; இது பிரிந்தால்,
தருவாய், எனக்கு உன் திருவடிக்கீழ் ஓர் தலைமறைவே!
உரை
   
1062“மூவா உருவத்து முக்கண் முதல்வ! மிக்கு ஊர் இடும்பை
காவாய்!” என, கடை தூங்கு மணியைக் கையால் அமரர்
நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை; அப்பால்
தீ ஆய் எரிந்து பொடி ஆய்க் கழிந்த, திரிபுரமே.
உரை
   
1063பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே-வந்து அமரர் முன்நாள்
முந்திச் செழுமலர் இட்டு, முடி தாழ்த்து, அடி வணங்கும்
நந்திக்கு முந்து உற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே?
உரை
   
1064அந்தி வட்டத்து இளங்கண்ணியன், ஆறு அமர் செஞ்சடையான்,
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும்,- பொய் என்பனோ-
சந்தி வட்டச் சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே?
உரை
   
1065உன் மத்தகமலர் சூடி, உலகம் தொழச் சுடலைப்
பல்மத்தகம் கொண்டு, பல் கடைதோறும் பலி திரிவான்;
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான்
தன் மத்தகத்து ஒர் இளம்பிறை சூடிய சங்கரனே.
உரை
   
1066அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள்; ஐயம் உணல்;
வரைப்பாவையைக் கொண்டது எக் குடிவாழ்க்கைக்கு? வான் இரைக்கும்
இரைப்பா! படுதலை ஏந்து கையா! மறை தேடும் எந்தாய்!
உரைப்பார் உரைப்பனவே செய்தியால்-எங்கள் உத்தமனே!
உரை
   
1067துறக்கப்படாத உடலைத் துறந்து வெந் தூதுவரோடு
இறப்பன்; இறந்தால், இரு விசும்பு ஏறுவன்; ஏறி வந்து
பிறப்பன்; பிறந்தால், “பிறை அணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கொலோ?” என்று, என் உள்ளம் கிடந்து மறுகிடுமே.
உரை
   
1068வேரி வளாய விரைமலர்க்கொன்றை புனைந்து, அனகன்,
சேரி வளாய என் சிந்தை புகுந்தான்; திருமுடிமேல்
வாரி வளாய வருபுனல் கங்கைசடை மறிவு ஆய்,
ஏரி வளாவிக் கிடந்தது போலும், இளம்பிறையே.
உரை
   
1069கல்-நெடுங்காலம் வெதும்பி, கருங்கடல் நீர் சுருங்கி,
பல்-நெடுங்காலம் மழைதான் மறுக்கினும், “பஞ்சம் உண்டு” என்று
என்னொடும் சூள் அறும்-அஞ்சல்!-நெஞ்சே! இமையாத முக்கண்
பொன்நெடுங்குன்றம் ஒன்று உண்டுகண்டீர், இப் புகல் இடத்தே.
உரை
   
1070மேலும் அறிந்திலன், நான்முகன் மேல் சென்று; கீழ் இடந்து
மாலும் அறிந்திலன்; மால் உற்றதே; வழிபாடு செய்யும்
பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்
காலன் அறிந்தான், அறிதற்கு அரியான் கழல் அடியே!
உரை