பாடல் எண் : 10 - 2
ஈண்டு செஞ்சடை யாகத்து ளீசரோ
மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ
ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே.
2
பொ-ரை: ஆகத்தில் ஈண்டிய செஞ்சடைகொண்ட இறைவரே! தொகுதியாய கருமுகிலின் நிறத்தையும் தளிரின் ஒளியையும் உடைய மணிகண்டரே. அடியேனை ஆண்டுகொண்ட நீரே அருள் செய்வீராக; நீண்ட இப்பெருங்கதவின் வலியினை நீக்குவீராக.
கு-ரை: ஈண்டு - திரண்டு கூடிய, அதாவது, சேர்த்துக் கட்டிய. மூண்ட கார்முகில் - திரண்டகரிய மேகம். முறி - தளிர்.
இறைவன் கண்டம் கறுப்பு நிறமும் ஒளியும் உடையது என்க. நீண்ட மரக்கதவின்வலி - நெடுநாளாகத் திறக்கப்படாத கதவின் வலிமையை.