பாடல் எண் : 14 - 2
மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்
முறையி னால்முனி கள்வழி பாடுசெய்
இறைவ னெம்பெரு மானிடை மருதினில்
உறையு மீசனை யுள்குமெ னுள்ளமே.
2
பொ-ரை: வானவர்களும் முனிவர்களும் மறையின் முறையினால் புதிய மலர்கள் கொண்டு வழிபாடு செய்கின்ற இறைவனும், எம்பெருமானுமாகிய இடைமருதூரில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்கும்.
கு-ரை: வேதவிதிப்படி (மறையின் முறையினால்) வானவர் முனிகள் வழிபாடு செய் இறைவன் என இயைக்க. உள்கும் - நினைக்கும்.