பாடல் எண் : 14 - 4
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை யாளு மிடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே.
4
பொ-ரை: எம்மையாளும் இடைமருதூர் உறையும் இறைவன் கழலைச் செம்மையாகத் தொழுவார் வினை சிந்தும். அத்தொழுகை இம்மையில் வானவர் செல்வம் விளைத்திடும்; அப்பிறப்பில் பிறவித்துயர் இல்லாவகையில் நீங்கும்.
கு-ரை: இம்மை - இப்பிறப்பிலேயே. வானவர் செல்வம் - சுவர்க்கபோகம். விளைத்திடும் - உண்டாக்கும். அம்மையே - இப்பிறப்பின் பின் எய்தும் நிலையில். பிறவித்துயர் - பிறவித்துன்பம். நீத்திடும் - நீக்கும். ஆளும் - ஆட்கொள்ளும். செம்மையே - செவ்வியமுறையில்.