பாடல் எண் : 14 - 9
வேத மோதும் விரிசடை யண்ணலார்
பூதம் பாடநின் றாடும் புனிதனார்
ஏதந் தீர்க்கு மிடைமரு தாவென்று
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.
9
பொ-ரை: தேவர்கள் ஓதும் விரிசடை அண்ணலாரும் பூதங்கள் பாடநின்று ஆடும் புனிதருமாகியவரை ஏதந்தீர்க்கும் இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் இறைவா! என்று சொல்லிப் பாதங்கள் ஏத்தினால் நம்பாவங்கள் நம்மை விட்டு நீங்கும்.
கு-ரை: வேதம் ஓதும் - வேதத்தை அருளிய, அல்லது வேதத்தால் ஓதப்படும். புனிதன் - தூயன்; நின்மலன். ஏதம் - துன்பம்.