பாடல் எண் : 17 - 10
சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்
கோல மாஅருள் செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்
வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே.
10
பொ-ரை: வஞ்சிப்பார் வஞ்சனையைக் களையவல்ல எமது அழகன்; திருமேனிகாட்டி அருள்செய்த கொள்கையினை உடையான்; காலன் அஞ்சும்படி உதைத்தவன்; கண்டம் இருளும்படி செய்த கடல் நஞ்சினை உண்டு அமரர்களை உயிர் வாழச்செய்தவன். இப்பெருமானை நெருநல்கண்ட இடம் திருவெண்ணியூரே ஆம்.
கு-ரை: வஞ்சனை (யைச்) சூல வல்ல எம் சுந்தரன் - என மாறுக. சூலுதல் - தோண்டுதல், களைதல். அடியரை வஞ்சிப்பார் செய்யும் வஞ்சனைகளைக் களையவல்லவன் என்றபடி; இது நாவுக்கரசரது அனுபவம். கோலமா அருள் செய்தல் - பக்குவர்க்குத் தன் திருமேனி காட்டி ஒப்பற்ற சிவஞானத்தை விளங்கச்செய்தல். கண்டம் இருள் ஆம் வேலை நஞ்சு என்க. வேலை - (பாற்) கடல்.