பாடல் எண் : 18 - 3
ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.
3
பொ-ரை: பெருமை மிக்க நல்லியல்புகள் பொருந்திய அன்பர்களே! ஆரியமும், தமிழும், இசையும் ஆனவனும் மிக்க குணத்தார் குறியாக நின்றவனும் ஒருபாற் பார்வதிதேவியாரை உடையவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறை சென்றடைவீர்களாக.
கு-ரை: ஆரியம் - வடமொழி. "வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்குமானவன்" (தி.6.ப.87.பா.1) என்பதறிக. கூரிய - சிறந்த; மிகுந்த. குறி - சொல்லும் எல்லை. காரிகை - அழகு. சீரியல் பத்தர் - சிறந்த தன்மை வாய்ந்த பக்தர் என்க.
கூரிய குணத்தார் குறி நின்றவன் என்பதற்குச் சிவஞானிகள் ஒரு குறிக்கண்வைத்து உணர, அக்குறிக்கண் நின்று அவர்க்குப் பேரின்பம் தருவோன் எனவும் பொருள் கொள்ளலாம்.