பாடல் எண் : 19 - 4
துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே
பண்ணி னால்முனம் பாட லதுசெய்தே
எண்ணி லாரெயில் மூன்று மெரித்தமுக்
கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
4
பொ-ரை: நல்ல எண்ணமில்லாதாரது முப்புரம் எரித்த முக்கண்ணனானது கடம்பூர்க் கரக்கோயிலை, பண்ணினால் திருமுன்பு பாடல் பரவி அச்சமின்றி நெஞ்சமே தொழுவாயாக!
கு-ரை: துண்எனாமனத்தால் - நடுக்கம் இல்லாத நினைவோடு, அன்பினால் என்றபடி. பண்ணினால் - இசையோடு. முன்னம் - அவனது திருமுன்னே. பாடலதுசெய்து - பாடி. எண்ணிலார் - நல்ல எண்ணமில்லாத திரிபுரத்தசுரர்கள். திரிபுரம் எரித்தான் ஆயினும் உய்யவல்லார் மூவரைக் காத்தவன் ஆகலின், அன்பினால் பாடித் தொழுக என்றபடி.