பாடல் எண் : 19 - 7
பண்ணி னார்மறை பல்பல பூசனை
மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும்
விண்ணி னார்கள் வியக்கப் படுவன
கண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே.
7
பொ-ரை: திருக்கடம்பூர்க் கரக்கோயில் பண்ணினைப் பொருந்திய மறையோதிப் பல்பூசனைகளை மண்ணினுள்ளார் செய்வதன்றியும் நாள்தோறும் விண்ணினுள்ளாரும் வியக்கப்படும் பூசனைகள் செய்யக்கருதினர்.
கு-ரை: பண்ணினார்மறை - பண்ணோடு பொருந்திய மறையை ஒதி. பல்பல பூசனை - வேதநெறி. சைவநெறி. பத்திநெறி என்னும் இவைபற்றிச் செய்யப்படும் பலவேறுவகையான பூசைகள். மண்ணினார் - நிலவுலகில் சிவனடியார்கள். வைகலும் - நாடோறும். விண்ணினார்கள் - தேவர்கள். வியக்கப்படுவன கண்ணினார் - மண்ணுலகில் உள்ளார் வியக்கத்தக்க செயல்களைச் செய்யக் கருதிச் செய்வார்கள். எங்கெனில், கடம்பூர்க் கரக்கோயிலின்கண் என்க. விண்ணினார் செய் பூசைகள் குற்றம் குறையின்றி நிறைவுடையன ஆகலின் வியக்கப்படுவன ஆயின, கண்ணினார் - கருதிச்செய்வர் ஆயினர். கண்ணுதல் - கருதுதல்.