பாடல் எண் : 2 - 3
கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ.
3
பொ-ரை: தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருக்கும் பாம்பையும், கையின்கண் பிரமகபாலத்தையும் மான்கன்றையும் உடையவனும், சர்வசங்கார நிலையில் விரும்பி எரிவீசி ஆடுவோனும் ஆய சிட்டர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ?
கு-ரை: கபாலம் - பிரமனது மண்டையோடு. மறி - கன்று. இட்டம் - விருப்பம். எரி - பிரளயகாலத் தீ. எள்தனை - எட்டனை என்றாயிற்று. தனை - அளவு. எள் - அளவின் சிறுமைக்கு எடுத்துக்காட்டு.