பாடல் எண் : 2 - 5
பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியைச்
சித்தனைச் செம்பொ னம்பலத் துள்நின்ற
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.
5
பொ-ரை: பித்தன் என்ற பெயருடையவனை, இடுகாட்டையே ஆடுமிடமாகக்கொண்ட, இயல்பாகவே பாசங்களின் நீங்கியோனை, இளம்பிறைசூடியவனை, எல்லாம் வல்லவனை, செம்பொற் சபையிலே நின்று ஆடும் தலைவனை அடியேன் மறவேன்.
கு-ரை: பித்தன் -பேரன்புடையவன். பெருங்காடு - மாப்பேரூழியாகிய சுடலை. அரங்கு - ஆடுமிடம். முத்தன் - பாசத்தினின்றும் விடுபட்டவன். சித்தன் - சித்துருவானவன்; சித்தத்திலிருப்பவன். அட்டமாசித்திகளை அருள்பவன். அத்தன் - தலைவன்.