பாடல் எண் : 20 - 4
வேறுசிந்தை யிலாதவர் தீவினை
கூறு செய்த குழக னுறைவிடம்
ஏறு செல்வத் திமையவர் தாந்தொழும்
ஆறு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
4
பொ-ரை: தம்மைப்பற்றியன்றி வேறு சிந்தனை இல்லாதவர்களது தீவினைகளைக் கூறு செய்யும் குழகன் உறைவிடம், செல்வம் ஏறுகின்ற தேவர்கள் தொழுகின்ற ஆறு சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும்.
கு-ரை: வேறு சிந்தையில்லாதவர் - மனத்தைப் பலவேறு வழிகளில் செல்லவிடாதவர்; அதாவது சிவனையே சிந்திப்பார். கூறுசெய்த - துண்டித்த. "தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்". ஏறுசெல்வம் - பெருகும் செல்வம். ஆறுசேர் - காவிரியாற்றின் வளம்சேர்ந்துள்ள; அன்பர்கள் நன்னெறியாகிய சிவஞானத்தை அடைதற்கு இடமாகிய எனினும் ஆம்.