பாடல் எண் : 21 - 3
கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர்
எனலு மென்மனத் தின்னம்ப ரீசனே.
3
பொ-ரை: கண்ணியும் கொன்றையும், தண்மதியோடு கங்கையும் சூடும் முறுக்குண்ட சடையர், அனல், சூலம், மான் மறி கூடிய கையை உடையவர், என்று சொன்னவுடன் அவ்இன்னம்பர் ஈசன் என்மனத்தே வெளிப்பட்டொளிரும்.
கு-ரை: கனலும் - விளங்கும். கண்ணி - தலைமாலை; கொன்றை பின் வருதலின் தும்பை முதலியன கொள்க. சூடும் - அணியும். புரிசடை - முருக்குண்ட சடை. அனல், சூலம், மான் மறி இவற்றை ஏந்திய கையினர் என்க. இன்னம்பர் ஈசன் கையினர் எனலும் என் மனத்துக்கனலும் எனப் பூட்டுவிற் பொருள் கோளாய்ப் பாடலின் முதற்சீரோடு இயைக்க.