பாடல் எண் : 21 - 8
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே.
8
பொ-ரை: தூமலர்களைத் தூவித் தொழுது, துதித்து, நின்று அழுது விருப்புற்று அரற்றுகின்ற மெய்யன்பர்களையும், வாளாபொழுதுபோக்கிப் புறக்கணிப்பார்களையும் கீழ்க்கணக்கெழுதும் இறைவன் இன்னம்பரில் உறையும் ஈசனேயாவன்.
கு-ரை: தொழுது - வணங்கி. தூமலர் - தூய்மையான மலர்கள். துதித்து நின்று - போற்றியுரைத்து நின்று. காமுற்று - அன்பு கொண்டு. பொழுதுபோக்கி - இறைவனைத் தொழாது இறைவன்புகழ் பேசாது வீண்பொழுதுகடத்தி. புறக்கணிப்பார் - வெறுப்பவர். கீழ்க்கணக்கு - சிறுவரிகளாய் எழுதும் குறிப்பு.