பாடல் எண் : 22 - 6
துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டவெம்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே.
6
பொ-ரை: பற்றுக்களைத் துறக்கும் நெஞ்சுடையவர்களாகிய தொண்டர்களே! மறவனாகிய பார்த்தன்மேற் கணைதொடுத்த எம்குறவேடம் கொண்ட பெருமானும், குடமூக்கில் உறைபவனுமாகிய இறைவனை உமது பிறவி நீங்குமாறு பித்தராய் நின்று பிதற்றுவீர்களாக.
கு-ரை: துறவி நெஞ்சினர் - அகப்பற்று புறப்பற்றை அடியோடு ஒழித்துத் துறவு எய்திய மனத்தை உடையவர். பித்தராய்ப் பிதற்றுமின் - ஈடுபாடுடையவராய்ப் பலவாறு அவன் புகழைச் சொல்லுங்கள். மறவனாய் - வீரனாய். பார்த்தன் - அருச்சுணன். கணை - அம்பு. தொட்ட - விடுத்த. குறவன் - கிராத வேடந்தாங்கி நின்றவன். குரவன் என்பது எதுகை நோக்கித் திரிந்ததெனலுமாம். அப்பொழுது மறவன் என்பதை வேடன் எனக் கொள்க.